14/02/2018
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் என்ற ஊரில் அமைந்துள்ளது சிவன்மலை. மேருமலையின் உச்சி பாகமே உதிர்ந்து விழுந்து இங்கு நிலை பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இதன் உச்சியில் பார்வதிதேவி தவமியற்றியதால் சக்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சிவகிரி, சிவசைலம், வெள்ளிமலை, செம்புமலை, பணமலை ஆகிய பெயர்களாலும் இதைப் போற்றுகின்றன புராணங்கள்.
ஆகமங்கள் குறித்து அறிய விரும்பிய அகத்தியர் இங்கு வந்து தவம் செய்தார்; சிவ வாக்கியரும் இங்கு தவம் செய்திருக்கிறார். இங்கே, சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளிதேவியுடன் மணக் கோலத்தில் அருள்கிறார் முருகன்.
மேலும் அழகுமலை, சென்னிமலை, கைத்த மலை உள்ளிட்ட 12 மலைகள் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக சிவன்மலை அமைந்திருப்பதும், கருவறையின் இருபுறமும் நவவீரர்கள், சுரலேகா நாயகி மற்றும் ஜரஉத்ரேஸ்வரர் ஆகியோர் அருள்பாலிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.
அனுமன் தனது சக்தியை அதிகரித்துக்கொள்ள விரும்பி, வைசிய முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து முருகனை வழிபட்டு அருள்பெற்றதாகத் திருக்கதை உண்டு. மலையின் அடிவாரத்திலேயே அனுமந்தராயர் ஆலயம் உள்ளது.
source: vikatan