31/10/2025
எங்கள் இட்லி கடையின் முதல் பீட்
இப்படத்தை பார்த்து இது முழுக்கு துறை என்றோ, துலாகட்டம் என்றோ யாராவது கூறினால் சொன்னவர் வெளியூர்காரராக இருப்பார் அல்லது வெளியூரிலிருந்து மயிலாடுதுறைக்கு வசிக்க வந்தவராக இருப்பார்.
இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் இந்த இடத்தை இவ்வாறு சொல்லமாட்டார்கள். இவ்விடத்தின் பெயர் இதுதான் என்றாலும் இந்த மண்ணுக்கே உரிய வேறு சொல் உண்டு. நாங்கள் இதனை லாகடம் என்றே சொல்வோம்.
பூர்வீக மக்கள் உச்சரிக்கும் பெயர் லாகடம். லாகடம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்றால் ஆங்கிலேயர்கள் துலாகட்டம் என்பதை உச்சரிக்கமுடியாமல் இவ்வாறு அழைத்துள்ளனர். துலாகட்டம் என்பதிலேயே லாகடம் என்ற சொல் வருவதை கவனிக்கவும்.
ஆங்கிலேயர் காலத்தில் கடித போக்குவரத்து தொடங்கியபோது கடிதங்களை கொடுக்க பல பகுதிகளாக பிரித்தனர். அது பீட் எனப்படும். அவ்வாறு பீட் பிரித்தபோது முதல் பீட்-டாக லாகடமே இடம் பெற்றிருக்கிறது. இன்றைக்கும் மயிலாடுதுறை அஞ்சலக வரைப்படத்தில் இதனை காணலாம்.
பழைமை வாய்ந்த, எழில் நிறைந்த இந்த லாடகம், மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகிறது.
அதுவும் ஐப்பசி மாதங்களில் கங்கை நதிக்கு நிகராக காவிரியை பார்ப்பார்கள். இம்மாதத்தில் நீராடுவதை புண்ணியமாக கருதுவதால் வெளியூரிலிருந்து நாள்தோறும் வந்த வண்ணம் இருப்பார்கள்.
ஆண்டுக்கொருமுறை இம்மாதத்தில் ( ஐப்பசி -30) நடக்கும் குடமுழுக்கு விழா பெரும்புகழ் பெற்றதாகும்.
குடமுழுக்கு அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரியில் இறங்கி நீராடுவது கண்கொள்ளா காட்சியாகும். அன்று மயிலாடுதுறை முழுக்க ஆங்காங்கே அன்னதானம் மூன்று வேளையும் வழங்கி கொண்டே இருப்பார்கள். குடமுழுக்கு அன்று மயிலாடுதுறையில் பசித்த வயிறே இருக்காது எனலாம். அப்படியொரு மனநிறைவு தரும் விழா மயிலாடுதுறையில் மட்டுமே பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது என்பதுதான் இவ்வூருக்கான சிறப்பாகும்.
அழகான இவ்விடத்தை அழகாக படம் பிடித்தவர் நண்பர் செந்தில் ஜெகந்நாதன். நன்றி.
-மயிலாடுதுறை இரா.சிவக்குமார்